யட்சி 15


Video Link Here

யாமினி தயங்கித் தயங்கி அவளது கடந்தகாலத்தினைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள்.

“நா சொல்லப் போற இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும். தயவு செஞ்சு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. கீர்த்தனா கிட்ட கூட சொல்ல வேணாம்.”

யட்சி 14 “ஹ்ம்ம். இட்ஸ் ஓகே யாமினி. சொல்லுங்க.”

“இத நா உங்ககிட்ட சொல்றதுக்கு ஒரே ஒரு ரீசன், அந்த டைம்ல நா உங்கள ரிஜெக்ட் பண்ணிட்டேன்னு என் மேல கோபத்துல இருந்தேன்னு சொன்னீங்கள்ல? அதனால தான். கதைய கேட்டுட்டு என் மேல ஏதாச்சும் தப்பு இருந்தா சொல்லுங்க. நா உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்குறேன். ஓகே.”

“ஹ்ம்ம். புதிர் போடாம சொல்லுங்க யாமினி.”

“எங்க வீட்ல நாங்க மொத்தம் மூணு பேரு. எனக்கு ஒரு அக்காவும் இருந்தா. பேரு யாழினி. என்ன விட ரொம்ப அழகா இருப்பா.

“ஓஹ். உங்கள விட அழகா வேற ஒருத்தங்க இருக்காங்களா இந்த உலகத்துல?”

“இன்டரெப்ட் பண்ணாம சொல்றத கேளுங்க ப்ளீஸ்.”

“ஐயோ! சாரி.. சாரி… நீங்க சொல்லுங்க.”

“எங்க ஏரியால அவள ரூட்டு விடாம யாருமே இருக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு பேரழகா இருப்பா.”

“ஹ்ம்ம். அப்புறம்?”

“காலேஜ் ல எனக்கு நிறைய லவ் டார்ச்சர் இருந்திச்சு. ஆனாலும் அதுல ஒருத்தன் எப்பவுமே என்ன தொந்தரவு பண்ணிகிட்டு இருந்தான். என்னால விருப்பத்தோட காலேஜ் போகக்கூட முடியாத அளவுக்கு தொந்தரவு பண்ணான். பாத்ரூம் போனா கூட பின்னாலயே வருவான். ஒரு நிமிஷம் கூட என்ன நிம்மதியா இருக்க விட மாட்டான். கொஞ்சம் சைக்கோ மாதிரி நடந்துக்குவான். ரவுடித்தனமும் இருந்ததனால யாரும் அவன எதுவும் கேக்க மாட்டாங்க. நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்தும் அவன் கேக்கல. அப்புறம் ஒரு நாள் இது பத்தி நா எங்க அக்காக்கிட்ட சொன்னேன். அடுத்தநாளே அவ என்ன காலேஜ்ல ட்ரோப் பண்ண வரும் போது காலேஜ் பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிட்டா. பிரின்சிபால் அவன கூப்பிட்டு வார்ன் பண்ணதும், என்மேல அவனுக்கு பயங்கரக் கோபம். ஒரு நாள் என்ன பிக்கப் பண்ண அக்கா வர வரைக்கும் நா செக்யூரிட்டி ரூம்ல உக்காந்துட்டு இருந்தேன்.”
என்று கூறிவிட்டு கதறிக்கதறி அழ ஆரம்பித்தாள்.

“ஐயோ! அழாதீங்க யாமினி. ப்ளீஸ்.”
என்று அவளை கொஞ்சம் வார்த்தைகளால் தேற்றினேன். ஆனாலும், அவள் அழுகையை நிறுத்தவில்லை. நான் உடனே காரை விட்டு இறங்கி பின் சீட்டில் ஏறி அவளருகில் உட்கார்ந்து கொண்டு அவளது கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினேன்.

“ப்ளீஸ் யாமினி. அழாதீங்க. அழாம என்ன நடந்துதுன்னு சொல்லுங்க. ப்ளீஸ்.” என்று நான் கெஞ்சிக் கொண்டிருக்க, கொஞ்ச நேரம் விடாமல் அழுதுகொண்டிருந்தவள், பின்னர் தழுதழுத்த குரலில் பேச ஆரம்பித்தாள்.

“நா அங்க இருக்கும் போது, என்கிட்ட சொல்லிட்டு செக்யூரிட்டி அங்கிள் டீ குடிக்க வெளிய போக, நேரம் பாத்து என்ன பழிவாங்குறதுக்காக அவன் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர கூட்டிகிட்டு உள்ள வந்து என்ன பலவந்தமா பிடிச்சி கிஸ் பண்ணிட்டான். அத அவனோட ப்ரெண்ட்ஸ் ஃபோன்ல வீடியோ பண்ணிட்டாங்க. யார்கிட்டயாச்சும் சொன்னா அந்த வீடியோவ காலேஜ் முழுக்க எல்லாருக்கும் அனுப்பிடுவேன்னு சொல்லி என்ன பிளாக்மெயில் பண்ணான். நா அழுதுக்கிட்டு அவன்கிட்ட அந்த வீடியோவ டெலீட் பண்ண சொல்லி கெஞ்சிண்டு இருக்கும் போது, அந்த நேரம் பாத்து சரியா எங்க அக்கா என்ன தேடிகிட்டு உள்ள வந்தா. நா அழுதுக்கிட்டு அவன்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்குறத பாத்ததும் உடனே உள்ள வந்து அவன் கன்னத்துல ‘பளார்’ ன்னு ஒரு அறை விட்டா.”
என்று கூறிவிட்டு மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

நான் எதுவும் கூறாமல் அவள் அழுது முடிக்கும் வரை அமைதியாக அமர்ந்திருந்தேன்.

அவள் கொஞ்ச நேரம் அழுதுவிட்டு என்னைப் பார்த்து அழுதுகொண்டே மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

“அக்கா அவன அறைஞ்சதும் கோபத்துல அவன் செக்யூரிட்டி ரூம்ல இருந்த ஒரு இரும்பு ராட எடுத்து அவ தலைலயே ஓங்கி அடிச்சான். அப்போ தலைய புடிச்சிகிட்டு கீழ விழுந்தவ தான்………”
என்று கூறிவிட்டு நிறுத்தாமல் கதறிக்கதறி அழுது கொண்டிருந்தாள்.

நான் என்ன செய்வது என்று தெரியாமல் அவளது கைகளைப் பிடித்து ஆறுதல் கூறிக்கொண்டிருந்தேன். அவளது கன்னங்களைப் பிடித்து கண்ணீரினையும் துடைத்து விட்டேன். ஆனாலும், அவள் அழுகையை நிறுத்தவில்லை. விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள். அவள் அழுவதனைப் பார்த்து எனது கண்களும் கலங்க ஆரம்பித்தன. அவளது தலையினை வாரி அணைத்து எனது தோள்க்கட்டில் சாய்த்துக் கொண்டேன். யாரோ அந்த முகம் தெரியாத ஒருவனை வெட்டிக் கூறு போடும் அளவுக்கு அவன் மேல் எனக்குக் கோபம் கோபமாக வந்தது.

“அவன என்ன பண்ணீங்க?”
என்று கோபமாகக் கேட்டேன்.

“அவன் இப்ப ஜெயில்ல இருக்கான்.” என்றாள் அழுதுகொண்டே.

பாவம் அவள். ஒருத்தனின் மிலேச்சத்தனமான காதல் காரணமாக சொந்த அக்காவையே இழந்திருக்கிறாள். தாங்கிக்கொள்ளவே முடியாத வலியில் இருந்த அவளை நானும் காதல் என்ற பெயரில் தொந்தரவு செய்ததனால் தான் அவள் என்னையும் தொல்லை என்று கூறி இருக்கின்றாள். அதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் நானும் அவள் மீது கடந்த 5 வருடங்களாக கோபத்தில் இருந்திருக்கிறேன் என நினைக்கும் போது என் மேல் எனக்கே கோபம் கோபமாக வந்தது.

அவள் அழுது முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தேன். அவள் சற்று நிதானமான நிலைமைக்கு வந்ததும்,

“சாரி யாமினி. உங்க மேல எந்த தப்பும் இல்ல. நா தான் உங்க சிட்டுவேஷன் புரியாம லவ் அது இதுன்னு உங்கள கஷ்டப்படுத்திட்டேன். ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி.” என்றேன்.

அவள் எனது தோள்க்கட்டில் இருந்து விலகி நிமிர்ந்து சீட்டில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள்.

“பரவால்ல விடுங்க. அக்கா போனதுக்கு அப்புறம் அங்க இருக்கப் பிடிக்கல. காலேஜ் போகவும் பிடிக்கல. எல்லாம் முடிஞ்சி ஒரு மூணு மாசத்துல காலேஜயும் மாத்திகிட்டு வீட்டையும் மாத்திகிட்டு உங்க வீட்டுக்குப் பக்கத்துல குடி வந்தோம். ஆனாலும், புது காலேஜ்லயும் எனக்கு லவ் டார்ச்சர் இருந்திச்சு. நீங்களும் அதையே சொன்னதும் கொஞ்சம் கோபப்பட்டுட்டேன். ஐ ஆம் சாரி..”

“நா தான் உங்ககிட்ட சாரி சொல்லணும் யாமினி. உங்க நெலம யாருக்குமே வரக்கூடாது.”

“ஹ்ம்ம். நா அழகா இருக்கேன்னு எல்லாரும் சொல்றீங்க. ஆனா, அந்த அழகால தானே எனக்கு அவன் டார்ச்சர் இருந்திச்சு. அதனால தானே எங்க அக்கா அநியாயமா…..”
என்று கூறிவிட்டு மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல யாமினி. நானும் உங்க அழகு பாத்து தான் உங்கள லவ் பண்ணேன். ஆனா, அழகுக்காக மட்டும் லவ் பண்ணல. உங்க கேரக்டர், உங்க நடத்தைகள், உங்க பண்பு எல்லாமே எனக்கு பிடிச்சிருந்திச்சு. முக்கியமா நீங்க எங்க அம்மாகூடவும் கீர்த்தனாகூடவும் பாசமா இருக்குறது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு. தயவு செஞ்சி என்ன நீங்க தப்பா நினைக்க வேணாம்.”

அவள் அழுதுகொண்டே இருந்தாள். எனக்கு கோபம் கோபமாக வந்தது.

“உங்கள இந்த நிலமைக்கு ஆளாக்கி, இப்டி அழ வச்சவன கண்டம் துண்டமா வெட்டி வீசணும்னு தோணுது யாமினி.” கோபம் அனல் பறக்க அவளிடம் கூறினேன்.

“உங்களுக்கே அப்டி தோணுதுனா எனக்கு எப்டி இருக்கும்? இதே பீல் எங்க எல்லாருக்கும் இருந்திச்சு. ஆனாலும், அவன் செஞ்ச தப்புக்கு இப்ப தண்டனைய அனுபவிக்கிறான். வெளிய வந்ததும் திருந்தி நடக்கவும் சான்ஸஸ் இருக்கு. அவனுக்கும் அம்மா அப்பா குடும்பம் எல்லாம் இருக்கு. அவங்களும் பாவம். நாங்க பட்ட கஷ்டம் அவங்களும் பட வேணாம் னு தோணிச்சு.” என்றாள் அமைதியாக.

“நீங்க ரியல்லி கிரேட் யாமினி. இந்த நேரத்துல இத சொல்றது சரியா தப்பான்னு எனக்கு தெரியல. ஆனாலும் சொல்றேன். உங்கள இந்த நிலமைல பாக்கும் போது, எனக்கு உங்க மேல இருக்குற காதல் இன்னும் கூடுது.”

அவள் எதுவும் சொல்லவில்லை. கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

“இந்த விஷயத்த பத்தி உங்ககிட்ட கேட்டு உங்கள கஷ்டப்படுத்துனதுக்கு ஐ ஆம் சாரி. ஆனா, இனிமே நீங்க எதுக்குமே அழக்கூடாது. நடந்தது, நடக்குறது, நடக்கப்போறது எல்லாமே நல்லதுக்குத்தான்னு நெனச்சிகிட்டு சந்தோசமா இருக்கப் பாருங்க.”

“ஹ்ம்ம். ட்ரை பண்றேன்.”

“ஹ்ம்ம். அப்புறம்.. கீர்த்தனா தேடப் போறா. நீங்க கிளம்புங்க.”

“நீங்க வரலையா?”

“எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நா இங்கயே இருக்கேன். நீங்க போங்க.”

“மனசு கஷ்டமா இருக்குன்னு மறுபடியும் குடிக்கப் போறீங்களா?”

“இல்ல. கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் போல இருக்கு.”

“எனக்கும் தான்.”

நான் எதுவும் பேசவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாக சீட்டில் சாய்ந்து கொண்டு அமர்ந்திருந்தோம்.
அருகில் இருந்த அவளது வாசனைகள் என்னை கிறங்கடித்துக்கொண்டிருந்தன.

“ஒரு ட்ரைவ் போலாமா?”
எனக் கேட்டேன்.

“இப்ப தானே வந்தோம்.”

“ட்ரைவ் போனா மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். துபாய்ல கூட மனசு கஷ்டமா இருந்தா நா இத தான் செய்வேன்.”

“ஓஹ். துபாய்ல அப்டி என்ன கஷ்டம் உங்களுக்கு?”

“ஏன்! உங்களுக்கு தெரியாதா?”

“இல்ல”

“ஓஹ்”

“சொல்லுங்க”

“எனக்கும் தெரியாது.”

அவள் லேசாக சிரித்தாள். பின்னர்,
“அவ்ளோ கஷ்டப்பட்டீங்களா என்ன?” என்று கேட்டாள்.

“எனக்கு தெரியாது”

“கஷ்டமா இருந்தா என்கூட பேசி இருக்கலாமே.”

“பேசி இருந்தா மட்டும் நீங்க மனசு மாறி இருப்பீங்களா என்ன? இன்னும் இன்னும் கஷ்டப்படத் தானே வச்சிருப்பீங்க?”

“ஒரு வேள நீங்க பேசி இருந்தா என்னோட சிட்டுவேஷன் என்னன்னு தெரிஞ்சிருப்பீங்க. அதுக்கப்புறம், உங்களுக்கு நா அப்டி பேசிட்டனேன்னு வருத்தம் இருந்திருக்காது.”

“ஹ்ம்ம். பேசி இருந்திருக்கலாம். என்ன பண்றது? உங்கள இனிமே தொல்லையே பண்ணக்கூடாதுன்னு ஒரு ஈகோ. அதனால தான் பேசல.”

“ஹ்ம்ம். பரவால்ல விடுங்க. நீங்க சொன்ன மாதிரி எல்லாம் நல்லதுக்குத்தான்னு நெனச்சிகோங்க. விதில என்ன இருக்கோ அது தானே நடக்கும்.”

“ஹ்ம்ம். பொல்லாத விதி.”

“ஏன்?”

“சில விஷயங்கள் நமக்கு கிடைக்காதுன்னு இருந்தா அத நம்ம கண்ல காட்டாமலே இருக்கலாமே இந்த விதி.”

“ஹாஹா.”

“எதுக்கு சிரிக்கிறீங்க?”

“ஒண்டும் இல்ல. அத விடுங்க. கொடைக்கானல் பிடிச்சிருக்கா?”

“ஹ்ம்ம். ரொம்ப பிடிச்சிருக்கு.”

“ஏன்?”

“இவ்ளோ அழக கண்குளிர பக்கத்துலயே இருந்து பாக்குற சான்ஸ் கெடச்சா கொடைக்கானல் பிடிக்காம இருக்குமா என்ன?”
நான் அவளைப் பார்த்தபடி இரண்டு பொருள்பட கூறினேன்.

“ஓஹ்! எந்த ஏரியா உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு?”

“எந்த ஏரியான்னு தனித்தனியா பிரிச்சி சொல்ற அளவுக்கு இல்ல. எல்லாமே பிடிச்சிருக்கு.”

“ஸ்பெஷல்லா ஏதாச்சும் இருக்குமே. அது என்னன்னு சொல்லுங்க.”

“உங்க கண்ணு”

“வாட்?”

“என்ன? நான் சிரித்தேன்.

“டேய். நா கொடைக்கானல் பத்தி கேட்டேன் டா. லூஸு”

“நானும் அதையே தான் சொல்றேன்.”

“கொடைக்கானல்ல எங்க இருக்கு என்னோட கண்ணு?”

“இதோ இருக்கே”
என்று எனது இரண்டு விரல்களை அவளது கண்களுக்கு அருகில் கொண்டு சென்று நிறுத்தினேன்.

“சரி. நா போறேன்” என்றவாறு கதவினைத் திறந்தாள்.

“ஹ்ம்ம்”

“நீங்க வரல?”

“இல்ல”

“ஏன்? இன்னும் மனசு கஷ்டமா இருக்கா என்ன?”

“இல்ல”

“அப்புறம் என்ன?”

“ஒரு மாதிரி போதையா இருக்கு.”

“என்ன போத?”

“தெரியல”

“நா வர முதல்ல ஏதும் குடிச்சீங்களா என்ன?”

“ச்சே ச்சே”

“அப்புறம் என்ன?”

“இவ்ளோ நேரம் உங்க கூட இருந்து பேசிட்டு இருக்கேன்ல. அதனால தான்னு நெனைக்கிறேன்.”

“டேய்.. இவ்ளோ நேரம் நா பேசிட்டா இருந்தேன்? அழுதுகிட்டு இருந்தேன்டா லூஸு.”

“நீங்க டேய் ன்னு சொல்லும் போது மறுபடியும் போதையாகுது எனக்கு”

“ஆஆஆ.. உன்ன…”
என்றவாறு எனது தோள்ப்பட்டில் ஓங்கி ஒரு குத்து விட்டாள்.

“ஆஆஆஆ”
என அவள் குத்திய இடத்தினைத் தடவிக் கொண்டு,

“என்ன பெர்ஃபியூம் யூஸ் பண்றீங்க நீங்க?” என்று கேட்டேன்.

“நா எதுவும் யூஸ் பண்ணல. எதுக்கு கேக்குறீங்க?”

“இல்ல. ஒண்டுமில்ல. சும்மா தான்.”

“பெர்ஃபியூம் பேர சொன்னா அதுக்கும் ஏதாச்சும் லைன் சொல்லுவீங்க”

“சொல்லலன்னாலும் சொல்லுவேன்.”

“ஹையோ! ராசா. நா போறேன். நீ என்னமோ பண்ணு. பை.”
என்றபடி காரில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

தொடரும்…

Mail and Gchat:
[email protected]

6705920cookie-checkயட்சி 15